இதய நோய் வராமல் தடுக்க
இதய நோய் பிரச்னையால் அவதிப்பட முக்கிய காரணம் நம்முடைய முறையற்ற உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை.
துரித உணவின் காரணமாக பலர் ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை சாப்பிட தவறிவிடுகிறார்கள். இதனால் நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஒவ்வொன்றாக தலை தூக்க ஆரம்பிக்கிறது. இது நாளிடைவில் இதய பிரச்னையாக மாறும். இந்த பிரச்னையில் இருந்து விடுபட உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும்.
தினமும் ஏதாவது ஒரு முழு தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவது அவசியம். பழம் மற்றும் காய்கறியில் ஆண்டி ஆக்சிடென்ட்ஸ் உள்ளது. இவை உடல் பருமன் மற்றும் தேவையற்ற கொழுப்பை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிக கொழுப்பு சார்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. கொழுப்பில் இரண்டு வகை உள்ளது.
எச்.டி.ஏ என்று அழைக்கப்படும் நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. கெட்ட கொழுப்பு வெண்ணை, நெய், சீஸ், எண்ணைகளில் இருப்பது. இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. எச்.டி.ஏ என்ற நல்ல கொழுப்பு உடற்பயிற்சி செய்வதால் அதிகரிக்கும். அதே சமயம் உடலில் உள்ள தசைகளை வலுவாக்கும்.
பொதுவாக நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் உருளை, கேரட், பீட்ரூட் போன்ற உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அவர்கள் அதை சாப்பிடக்கூடாது என்றில்லை. அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பது தான் முக்கியம். உருளையை வேகவைத்து காய்கறிகளுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். எண்ணையில் பொரித்து சாப்பிடக் கூடாது.
அதே போல் பீட்ரூட், கேரட்டையும் பொரியல் செய்து சாப்பிடலாம். இதனை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழத்தை உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாது. மதிய உணவுக்கு முன் அல்லது மாலை நேரங்களில் டீ சாப்பிடும் சமயத்தில் சாப்பிடலாம். அதே போல் சப்போட்டாவை தோலுடன் சாப்பிடலாம்.
பழங்களை சாறு பிழியாமல் அப்படியே சாப்பிடுவதால் அதில் உள்ள நார்சத்து நமக்கு குறையாமல் கிடைக்கும். நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் தினமும் 50 கிராம் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அதே போல் எல்லாரும் தினமும் குறைந்த பட்சம் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதய நோய் வராமல் நம்மை நம்மால் பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறுகிறார் உணவு ஆலோசகர் ஹேமாமாலினி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக